பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்கே விரைந்த இந்திய ராணுவ தளபதி.. அதிரடி ஆய்வு
ஸ்ரீநகர்: இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வடக்கு பிராந்திய பகுதிகளை பார்வையிட சென்றார். அப்போது பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே இந்திய எல்லையில் இருந்த ராணுவ நிலைகளை பார்வையிட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு சில பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பிற்கு பின்பு முதன் முறையாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீர் சென்றார். அவர் வடக்கு பிராந்திய பகுதிகளை பார்வையிட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே இந்திய எல்லையில் உள்ள ராணுவ நிலைகளை அவர் பார்வையிட்டார். மேலும் எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளையும் பிபின் ராவத் சந்தித்து ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.
காஷ்மீர் தொடர்பான, இந்திய நடவடிக்கையால் பாகிஸ்தான் கோபத்தில் உள்ள நிலையில், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ராணுவ தளபதி, காஷ்மீர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.