காஷ்மீரில் ராணுவ தளபதி தல்பீர்சிங் ஆய்வு... எல்லையில் ஊடுருவல் அபாயம் இருப்பதாக 'வார்னிங்
ஸ்ரீநகர்: ராணுவத்துக்கு எதிராக வன்முறைகள் நீடித்து வரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று ஆய்வு நடத்தினார். தற்போதைய பதற்றமான சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் கூடுதல் கண்காணிப்புக்கும் தல்பீர்சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பத்திரிகைகள் எதுவும் வெளியாகவும் இல்லை.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது இந்த பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவக் கூடும் என்பதால் கூடுதலாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு ராணுவத்தினரை கேட்டுக் கொண்டார்.
மேலும் ராணுவ முகாம்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்கும்போது கூடுமானவரை பொறுமை காக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதேபோல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கிராமங்களில் உள்ள பெரியவர்களின் உதவியை பெற வேண்டும் என்றும் தல்பீர்சிங் கேட்டுக் கொண்டார். எல்லைப் பகுதிகளான குப்வாரா, அவந்திபோரா ராணுவ முகாம்களையும் தல்பீர்சிங் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனிடையே இன்று முதல் வரும் 26-ந் தேதி வரை கார்கில் போர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.