இந்திய ராணுவ தினம்- பிரதமர் உட்பட அனைத்து தலைவர்களும் தேசம் காக்கும் வீரர்களுக்கு மரியாதை
டெல்லி: இந்திய ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதோடு, இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் ராணுவம் ஈடுபடுகிறது.
சுதந்திரம் பெற்ற பின்பு, 1948 ஜனவரி 15 இல் ராணுவ தளபதி பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து இந்தியாவின் கரியப்பா ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15ம் தேதி இந்திய ராணுவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய ராணுவம் உலகின் 4வது பெரிய ராணுவமாகும். இதன் தலைமையகம் டெல்லி. தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர் பிக்ராம் சிங். இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை ஆகிய பிரிவுகள் உள்ளன.
தற்போது ராணுவத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் 4 முறையும், சீனாவுடன் ஒருமுறையும் போரில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படையிலும், இந்திய ராணுவம் பங்கேற்றுள்ளது.
இதனையடுத்து போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி தல்பீர் சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் வலைதளத்தில் ராணுவ தினத்தை முன்னிட்டு போரில் உயிரிழந்த வீரர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.