எல்லையில் மீண்டும் ஊடுருவி பாகிஸ்தான் அத்துமீறல்.. இந்திய ராணுவத்தின் அதிரடியில் 2 பேர் பலி
ஸ்ரீநகர்:இந்திய எல்லைப்பகுதியில் கொடூர தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்முகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் வழக்கம் போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான நாவுகாம் பகுதியில் பாகிஸ்தான் எல்லை அதிரடி படையினரின் ஊடுருவ முயற்சித்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
ஊருருவலுக்கு ஏற்ற வகையில் அடர்ந்த காடுகளை அவர்கள் பயன்படுத்தக் கூடும் என்றும் இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். அதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த 2 பேர் பலியாகினர். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது.