காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உட்பட 2 பேர் பலி - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமிடையே ஏற்பட்ட நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும், மூன்று தீவிரவாதிகளும் பலியாகினர். பலியான ராணுவ அதிகாரிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.
கடந்த வியாழன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில் நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிர் இழந்ததுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்குள்ள கரேவா மலினோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலில் பலியான ராணுவ அதிகாரிகளில் ஒருவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர். 31 வயதாகும் அவரது பெயர் மேஜர் முகுந்த் வரதராஜன். மற்றொரு வீரரின் பெயர் விக்ரம் சிங்.
வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் இன்று கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு இரவு கொண்டு வரப்படுகிறது.
நாளை (திங்கட்கிழமை) மேஜர் முகுந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.
முகுந்த்தின் வீரமரணம் குறித்து கேள்விப்பட்ட அவரது குடும்பத்தார் சோகத்தில் முழ்கினர்.