படையெடுத்து வரவில்லை.. பயிற்சிதான் எடுத்தோம்.. மம்தா பானர்ஜிக்கு ராணுவம் பதில்
கொல்கத்தாவில் பிரதான பாலம் உள்ளிட்ட சில இடங்களில் மாநில அரசின் அனுமதியின்றி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியதை இன்று ராணுவம் மறுத்துள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தா பிரதான பாலம் அருகே சுங்கச் சாவடியில் மாநில அரசின் அனுமதியின்றி ராணுவ வீரர்களை நிலைநிறுத்தியதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுப்பிய குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது. மேற்கு வங்க மாநில போலீசாருடன் இணைந்தே பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
கொல்கத்தா- ஹவுரா இடையே உள்ள பிரதான பாலத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடி உள்ளிட்ட சில இடங்களில் மாநில அரசின் அனுமதியின்றி ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு அங்கு வசூல் நடத்தப்பட்டதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்படும் வரை தலைமைச் செயலகத்திலேயே தாம் தங்க இருப்பதாகவும் மம்தா அறிவித்தார். இது ஒரு படையெடுப்பு எனவும் குற்றம்சாட்டினார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு அமளி காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராணுவம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க ராணுவ தளபதி சுனில் யாதவ் கூறியிருப்பதாவது:மேற்கு வங்க மாநில போலீசாருடன் இணைந்து ராணுவம் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் சுங்கச் சாவடிகளை பணம் வசூலித்ததாக கூறுவது ஆதாரமற்றது என்றும் கூறினார்.
மாநில போலீசாருடன் இணைந்து நவம்பர் 27, 28-ம் தேதிகளில் பயிற்சியில் ஈடுபட ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகவும், நவம்பர் 28-ம் நடந்த நாழுதழுவிய போராட்டம் காரணமாக கொல்கத்தா போலீசார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை தள்ளி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி நவம்பர் 30- டிசம்பர் 2 ஆம் தேதி வரை அந்த பயிற்சித் திட்டம் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்தக் குழுவில் கொல்கத்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் இருவர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் 9 மாநிலங்களில் 80 இடங்களில் பயிற்சி நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். சில புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டதாகவும் சுனில் தெரிவித்தார். மாநில அரசு அனுமதியுடன் தான் நடந்ததாக அந்த குழுவின் தளபதி எஸ்எஸ் பிர்தியும் கூறினார்.