மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு.. ராணுவம் வாபஸ் பெறப்பட்டது
மேற்கு வங்கத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிருப்புப் போராட்டத்தை நிறைவு செய்து தனது வீடு திரும்பினார்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து வீடு திரும்பினார்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள அந்த மாநில தலைமைச் செயலகம் வளாகம், அங்குள்ள முக்கிய பகுதிகளின் சுங்கச்சாவடிகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு, மாநில அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி, அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராணுவத்தினை திரும்பப் பெறும் வரை, தலைமைச் செயலகக் கட்டிடத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகவும் அவர் அறிவித்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இப்பிரச்னை எதிரொலித்தது.
இதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மன வேதனை தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுவதாகக் கூறி, அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்புதல் கோரப்பட்டது. இந்நிலையில், அனுமதி பெறவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா திடீரென சர்ச்சையை ஏற்படுத்துவதாக மனோகர் பாரிக்கர் குற்றம் சாட்டினார்.
எனினும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அம்மாநிலத்தில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. அதனை முழுவதுமாக உறுதி செய்தபின், உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.