புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்
புல்வாமா ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தினரைக் குறி வைத்து தாக்கியுள்ளனர். இதில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.
44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ கவச வானம் இந்தத் தாக்குதலில் முற்றிலும் சேதமடைந்தது. அரிஹால் என்ற கிராமத்தில் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் இதே பிராந்தியத்தில்தான் சிஆர்பிஎப் வாகனம் தற்கொலைப் படை மூலம் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. தீவிரவாதிகள் கற்கள் வீசியும் தாக்கினர். இந்த தாக்குதலில் 5 படையினர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் நோக்கம் நிறைவேறவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் தவிர வேறு அசம்பாவிதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 படையினர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.