உ.பி.: பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்ணை கிண்டல் செய்ததை எதிர்த்து கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேத்மித்ரா சவுத்ரி. மீரட்டில் உள்ள ராணுவத்தின் என்ஜினியர் பிரிகேடில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மீரட்டில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவர் தினமும் மாலை வேளையில் கிரிஷண் பால் என்பவரின் பண்ணைக்கு சென்று பால் வாங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலையும் அந்த பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது பாலின் மகள் வரிசையில் நின்ற வேத்மித்ராவுக்கு டீ கொடுத்துள்ளார். 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்.
இதையடுத்து பாலின் மகனும், வேத்மித்ராவும் அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. வேத்மித்ரா வாலிபர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த வாலிபர்கள் பலரை அழைத்து வந்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும் அவரது தலையில் கம்பியால் தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷ், சதீஷ் மற்றும் சதிந்திரா ஆகியோரை கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே வேதமித்ராவின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடன் ஷாம்லியில் அடக்கம் செய்யப்பட்டது.