ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எங்களை பயன்படுத்துவதா?.. ராணுவத்தினர் கடும் அதிருப்தி
டெல்லி: வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாச்சார விழாவுக்கு ராணுவத்தைப் பயன்படுத்தியிருப்பது நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு ராணுவத் தளபதி இணங்கியிருக்கக் கூடாது என்று ராணுவத்தினும், முன்னாள் ராணுவத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் ராணுவத்தை ஆன்மீக விழாவுக்குப் பயன்படுத்தியதைக் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் வெள்ள வடிநிலப் பகுதியில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து உலக கலாச்சார திருவிழாவை நடத்துகிறார் ரவிசங்கர். நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இது நடைபெறுகிறது.
இதற்காக ராணுவ பொறியாளர்களைப் பயன்படுத்தி இரண்டு தற்காலிகப் பாலங்களை அமைத்துக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒரு தனியார் அமைப்பு நடத்தும் விழாவுக்காக ராணுவப் பொறியாளர்களைப் பயன்படுத்தி இப்படி பாலம் அமைத்துக் கொடுத்தது மிகத் தவறான செயல் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ராணுவத்தை மத்திய அரசு துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் கண்டனம் வெடித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் கண்டனம் தெரிவித்து ரூ. 5 கோடி அபராதமும் விதித்துள்ளது. ஆனால் விழா நடத்த அது தடை விதிக்கவில்லை.
ரவிசங்கர் விழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு ராணுவத்தினருக்கு தான் தான் உத்தரவிட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். இதனால் பாஜக அரசுக்கு கண்டனங்கள் கூடியுள்ளன.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த செயல் ராணுவத்திற்குள்ளும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது பல மூத்த ராணுவ அதிகாரிகள் இந்த செயலுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ராணுவத்தினரையும், ராணுவ சாதனங்களையும் தனி நபர் நிகழ்ச்சிக்காக மத்திய அரசு பயன்படுத்தியிருப்பது நல்லதல்ல என்று அவர்கள் பெயர் குறிப்பிட விரும்பாமல் கருத்து தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நோக்கிலான ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு ராணுவத்தையும், ராணுவத்தினரையும் பயன்படுத்தியது ரசிக்கும் வகையில் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிடும்போது அதை ராணுவ அதிகாரிகளால் மீற முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் இந்த விஷயத்தில் ராணுவத் தலைமைத் தளபதி சற்று கடுமையாக இருந்திருக்கலாம். ராணுவத்தினரை பயன்படுத்த முடியாது என்று அவர் கூறியிருக்க முடியும் என்றும் ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ராணுவத்தை ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு பாலம் கட்ட பயன்படுத்திய செயலை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது உடனடியாக ராணுவத்தை மத்திய அரசு அனுப்பவில்லை. மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால் அனுப்பவில்லை என்று அதற்குக் காரணம் கூறியது. ஆனால் ரவிசங்கர் விழாவுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடியுள்ளது மத்திய அரசு என்று பலரும் குமுறியுள்ளனர்.
இதற்கிடையே, சிலர் அமர்நாத் யாத்திரைக்கு ராணுவம் பாதுகாப்பு தருவதில்லையா. அது போலத்தான் இதுவும் என்று கூறியுள்ளனர். இதை முன்னாள் ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்னைன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தவறு என்றால் அது தவறுதான். அதை நியாயப்படுத்தக் கூடாது. ராணுவத்தை ரவிசங்கர் விழாவில் ஈடுபடுத்தியதை 100 சதவீதம் ஏற்க முடியாது.
அமர்நாத் யாத்திரைக்கு ராணுவம் முழு உதவிகளைச் செய்கிறது. பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் அமர்நாத் யாத்திரை விவகாரம் வேறு, ரவிசங்கர் நிகழ்ச்சி விவகாரம் வேறு. இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்றார் அவர்.
அதேபோல இன்னொரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கூறுகையில், ஸ்ரீஸ்ரீ பவுண்டேஷன் நிறுவனம் ஒரு வர்த்தக நிறுவனமாக செயல்படுகிறது. பகிரங்கமாக நிதியுதவிகளைப் பெறுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது, யாரிடமிருந்து வருகிறது என்பதை அரசு அறியுமா? இது லாப நோக்கில்லாத நிறுவனம் என்று கூறுகிறார்கள். அது தவறு. உண்மையில் இதன் வங்கிக் கணக்குகளைப் பார்த்தாலே அனைத்தும் தெரிய வரும் என்றார் அவர்.
ராஜ் கத்யான் என்ற இன்னொரு ராணுவ முன்னாள் அதிகாரி வித்தியாசமாக பேசுகிறார். அவர் கூறுகையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தற்காலிக பாலம் அமைப்பது ராணுவத்தினருக்கு நல்ல பயிற்சி என்று அவர் பேசியுள்ளார்.
பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ்
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் கவதங்கர் விடுத்துள்ள அறிக்கையில், ராணுவத்தினரை தனி நபர் நிகழ்ச்சிக்காக பயன்படுத்த உத்தரவிட்ட பாரிக்கர் அதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்திய ராணுவத்தினரை கார்ப்பரேட் அடிமைகளாக மாற்றி விட்டது பாஜக அரசு. இந்திய வீரர்கள் நமது பெருமை. அவர்களை அடிமைகள் போல நடத்தியதை ஏற்க முடியாது.
ராணுவத்தினரின் பெருமை குலையும் வகையில் செயல்பட்ட மத்திய அமைச்சர் பாரிக்கர் நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.