வி.ஆர்.எஸ். பெற்றவர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் பொருந்தும்: மோடி
ஃபரீதாபாத்: விருப்ப ஓய்வு பெற்றவர்களும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் பயனடையலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரீதாபாத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ராணுவம்
ராணுவத்தில் உள்ள 80 சதவீதம் பேர் ஜூனியர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் 15 அல்லது 17 அல்லது 20 ஆண்டுகள் கழித்து ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் எந்த பலனும் கிடைக்காது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தான் முதலில் பலன் கிடைக்கும்.
பிரதமர்
பணியில் இருக்கையில் காயம் அடைந்து சேவை செய்ய முடியாமல் போன முன்னாள் ராணுவத்தினருக்கும் இந்த திட்டத்தினால் நன்மை உண்டு. அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் நன்மை அடையக் கூடாது என்று இந்த பிரதமர் நினைக்கவில்லை. இந்த திட்டம் மற்றும் விருப்ப ஓய்வு ஆகியவற்றில் அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடையே தவறான கருத்தை பரப்புகிறார்கள்.
ரூ.10,000 கோடி
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர ரூ.500 கோடி செலவாகும் என்று முந்தைய அரசு கணித்திருந்தது. ரூ.500 அல்ல ரூ.700 கோடி ஆகும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் உண்மையில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும்.
40 ஆண்டுகள்
40 ஆண்டுகளாக எதையுமே செய்யாதவர்களுக்கு ஜவான்கள் சார்பில் பேச எந்த உரிமையும் இல்லை என மோடி தெரிவித்துள்ளார்.