ராம் ரஹீம் ஆசிரமத்திலிருந்து 18 சிறுமிகள் மீட்பு.. பரபரப்பு தகவல்கள் !
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், பெண்கள் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்கள் மீட்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேரா அமைப்பின் தலைமையகம் சிர்சாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரமத்தில் தான் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அங்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வன்முறையை அடுத்து, ஹரியானாவில் ராணுவம் குவிக்கப்பட்டதால் தலைமை ஆசிரமத்தில் இருந்து சாமியாரின் ஆதரவாளர்கள் வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்களை மீட்டு உள்ளது என்றும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னும் 3000 ஆதரவாளர்கள் அதே ஆசிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சாமியாரின் ஆதரவாளர்கள் வெளியேறியும் வருகிறார்கள். மற்ற இடங்களிலுள்ள ஆசிரமங்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் தலைமையகத்திற்கு இன்னும் சீல் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.