68 நாட்டு சிறைகளில் 6500 இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்
டெல்லி: உலகம் முழுவதும் உள்ள 68 நாடுகளில் உள்ள சிறைகளில் சுமார் 6500 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
68 நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 6483 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக சவுதி அரேபிய சிறைகளில் 1469 பேர் உள்ளனர். இந்த ஆண்டு நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 572 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் விடுவிக்கப்பட்டதுபோக, தற்போது 421 பேர் உள்ளனர்.
322 இந்தியர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இதில், 276 பேர் பாகிஸ்தானிலும், 43 பேர் வங்கதேசத்திலும் உள்ளனர். இந்த ஆண்டு 4 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் இறந்துள்ளனர்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.