மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவுக்கு கைது வாரண்ட்?
பெங்களூரு : மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவியும், படத்தயாரிப்பாளருமான பர்வதம்மாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா. இத்தம்பதிக்கு புனீத் ராஜ்குமார், சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். பர்வதம்மா படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தனது படங்களில் வேலை பார்த்தவர்களுக்கு பர்வதம்மா இ.எஸ்.ஐ., இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை செய்து தரவில்லை என கர்நாடக பிலிம்சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப் பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில், பர்வதம்மாவிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வருடத்தில் சில நாட்கள் மட்டுமே பணி புரியும் சில ஊழியர்களுக்கு எவ்வாறு இத்தகைய சலுகைகளை தயாரிப்பாளர்கள் செய்து தர இயலும் என நடிகை தாரா கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனடிப்படையில், அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ‘இந்த சலுகைகள் திரைத் துறை ஊழியர்களுக்கு அரசே செய்து தரும்' என்றார்.
ஆனால், இதற்கு முன்னதாகவே பர்வதம்மாவிற்கு கைது வாரண்ட் அளிக்கப் பட்டு விட்டதாகத் தெரிகிறது. எனவே, பர்வதம்மா மீது மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.