ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு.. மலேசியாவை சேர்ந்த இருவருக்கு பிடி வாரண்ட்
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், தயாநிதி மாறன் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 18 ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதே வழக்கில் தொடர்புடைய அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் இருவரும் மலேசியாவில் வசித்து வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி இவர்கள் இருவருக்கும் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. இருந்தும் இவர்கள் இருவரும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள், இருவரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 18 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.