சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் வங்கி தலைவர் சஸ்பெண்ட்!
டெல்லி: லஞ்சப்புகாரினால் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் வங்கி தலைவர் எஸ்.கே.ஜெயின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிண்டிகேட் வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான எஸ்.கே.ஜெயின், ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2ஆம் தேதி டெல்லி, பெங்களூரு, போபால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரூ.50 லட்சம் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக சிண்டிகேட் வங்கித் தலைவர் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், எஸ்.கே.ஜெயினை சஸ்பெண்ட் செய்து, நிதித்துறை செயலாளர் ஜி.எஸ்.சாந்து உத்தரவிட்டுள்ளார். சி.பி.ஐ.யிடமிருந்து கிடைத்துள்ள முதற்கட்ட அறிக்கையின் படி ஜெயின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாந்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் ஜெயின் இப்பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.