டெல்லி ஆணையத்திடம் அபராத தொகை ரூ 4.75 கோடியை செலுத்தியது வாழும் கலை அமைப்பு!
டெல்லி: யமுனை சமவெளிப் பகுதிகளை சேதப்படுத்தியதற்காக தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் ரூ4.75 கோடி அபராதத் தொகையை செலுத்தியது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது. அப்போது யமுனை வெள்ள சமவெளி பகுதிகளை சேதப்படுத்தியதாக வாழும் கலை அறக்கட்டளைக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த தேசிய தீர்ப்பாயம், யமுனை சமவெளிப்பகுதியை சேதப்படுத்தியதற்கு நட்ட ரூ.5 கோடி செலுத்த உத்தரவிட்டது. முதல்கட்டமாக ரூ.25 லட்சம் செலுத்திய வாழும் கலை அறக்கட்டளை எஞ்சிய ரூ.4.75 கோடியை வங்கி உத்தரவாதமாக வழங்குவதாக தெரிவித்தது.
ஆனால் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சனிக்கிழமைக்குள் எஞ்சிய ரூ4.75 கோடியை செலுத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி 4.75 கோடி ரூபாய்க்கான வரைவோலையை டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் வாழும் கலை அமைப்பு வழங்கியுள்ளது.