ரூ.4.75 கோடியை உடனடியாக டெபாசிட் செய்க.. ரவிசங்கரின் வாழும் கலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லி: யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கான சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.4.75 கோடியை சனிக்கிழமை அறக்கட்டளை செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ந் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக யமுனை நதியில் மிதக்கும் தற்காலிக பாலங்களை ராணுவத்தினர் அமைத்து வந்தனர்.
இதற்காக சமவெளி பகுதிகளை சேதப்படுத்தியதாக வாழும் கலை அறக்கட்டளைக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாயம், சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி செலுத்துமாறு உத்தரவிட்டது. முதல்கட்டமாக, ரூ.25 லட்சம் செலுத்திய வாழும் கலை அறக்கட்டளை, மீதி ரூ.4.5 கோடியை இதுவரை செலுத்தவில்லை.
இந்நிலையில், சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய விடுமுறைக்கால அமர்வு, ரூ.4.5 கோடியை இன்று (சனிக்கிழமை) உடனடி பரிமாற்றம் மூலம் டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையத்திடம் செலுத்துமாறு வாழும் கலை அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.
அதேபோல் 3 நாள் உலக கலாச்சார விழா நடைபெற்ற இடத்தை ஷஷி சேகர் தலைமையிலான நிபுணர்கள் குழு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் ஜூலை 4-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 10 ஆம் தேதிக்கு முன் இந்த ஆய்வு நடத்தப்படவிட்டால், பிறகு மழை பெய்ய தொடங்கிவிடும். அதன் பிறகு இந்த குழுவின் ஒட்டுமொத்த நோக்கமும் தோற்கடிப்படும் என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.