காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு செல்லுமா, செல்லாதா என்பது குறித்த முக்கிய வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு விசாரணையை குறைந்தது 6 மாதங்களாவது ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் 2 மாதங்களுக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
1954ம் ஆண்டு சட்டப்ப்பிரிவு 35-ஏ என்பது அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதாகும். இதன் படி மாநில சட்டசபை சம உரிமை, சமத்துவம் ஆகியவற்றை பாதிக்காதவாறு எந்த ஒரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.
சட்டப்பிரிவு 35-ஏ காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரக் குடிகள் என்ற விஷயத்தை கையாளும் சட்டப்பிரிவு. இதன் படி மாநிலத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்கும் பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டால் இந்தப் பெண்ணுக்கும் இவரது வாரிசுக்கும் சொத்துரிமை கிடையாது, சொத்துக்களில் பங்கு கிடையாது என்ற ஷரத்து உள்ளது.
இந்த சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்க கோரி டெல்லியை சேர்ந்த என்ஜிஓ 'வீ தி சிட்டிசன்ஸ்' அமைப்பு 2014ல் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தது. இதன்பிறகு மேலும் மூவரும் இதுபோல மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வழக்கை மேலும் 6 மாதங்கள் ஒத்தி வைக்க கோரிக்கைவிடுத்தது. ஆனால் நீதிமன்றம், 8 வாரங்கள் கழித்து விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.