370வது பிரிவை நீக்குவதற்கு ஜம்மு காஷ்மீர் பாஜக மூத்த தலைவர் கடும் எதிர்ப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பிரிவை நீக்கக் கூடிய 370வது பிரிவை நீக்க அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஃபையாஸ் அகமது பட் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவோம் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஜம்மு காஷ்மீர் விவகாரம் மீண்டும் தலை தூக்கியத். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவர் ஃபையாஸ் அகமது பட், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்று பேசுகிறவர்கள் வரலாற்றைப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகிறார்கள். 370வது பிரிவை ஜம்மு காஷ்மீரத்து அரசியல்சாசன சட்டசபை மட்டுமேதான் நீக்க முடியும் என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
75 பேர் கொண்ட ஜம்மு காஷ்மீர் அரசியசாசன சட்டசபையில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் 2 பேர்தான். அதனால் அந்த அரசியல்சாசன சட்டசபையை மீண்டும் கூட்டவே முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரத்துக்கு பிரசாரத்துக்கு வந்த போது கூட அந்த பிரிவை நீக்குவேன் என்று சொல்லவில்லை. அந்த பிரிவின் தேவை குறித்து விவாதிக்கலாம் என்றுதான் பேசியிருந்தார் .
இவ்வாறு ஃபையாஸ் அகமது பட் கூறியுள்ளார்.
அரசியல்சாசன சட்டசபை உறுப்பினர் குலாம் ரசூல் கர்
370வது பிரிவு தேவை என்பதை வலியுறுத்திய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசன சட்டசபையின் உறுப்பினர்களில் உயிரோடு இருப்பவர்களில் ஒருவர் குலாம் ரசூல் கர். இது குறித்து அவர் கூறுகையில், மோடி அரசானாலும் எந்த ஒரு இந்திய அரசாலும் 370வது பிரிவை நீக்கவே முடியாது.
370வது பிரிவு என்பது நிரந்தரமானது. நீக்கக் கூடியது அல்ல. 370-வது பிரிவுக்கான ஒப்பந்தம் என்பது அன்று ஜம்மு காஷ்மீர் என்ற நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். அப்படி 370வது பிரிவை நீங்கள் நீக்குவதானால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருப்பது என்பது கேள்விக்குறியாகத்தான் அமையும் என்றார்.