இப்படியே பேசுனா... காஷ்மீருக்குள் கால் வைக்க முடியாது: அமித்ஷாவை எச்சரிக்கும் மெகபூபா!
ஸ்ரீநகர் : 370 வது பிரிவினை ரத்து செய்வது குறித்து பேசிவரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீருக்குள் கால் வைக்க அனுமதிக்க முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவினை நீக்கும் விஷயத்தில் பாஜக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து இன்று பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, 370வது பிரிவினை ரத்து செய்வது குறித்து பேசிவரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ஜம்மு காஷ்மீருக்குள் கால் வைக்க அனுமதிக்க முடியாது என்றார்.
உங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35 ஏ பிரிவினை நீக்கினால் ஒவ்வொரு காஷ்மீரிகளும் போராளியாவார்கள் என்றும் மெகபூபா எச்சரித்துள்ளார். 370வது பிரிவினை ரத்து செய்தால் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள படையாகவே இந்தியா கருதப்படும் என்றும் மெகபூபா கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 2ம் தேதியே அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து மெகபூபா பேசுகையில், "ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவினை நீக்கிவிடுவோம் என அமித்ஷா பகல் கனவு காணுகிறார்.அது ஒரு நாளும் நடக்காது. அப்படி 370வது பிரிவினை நீக்கினால் இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் பிரிந்துவிடும். எங்கள் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் மற்றும் நிபந்தனைகளை நீக்கினால், இந்தியாவுடனான உறவு முடிவுக்கு வந்துவிடும்" என கடுமையாக எச்சரித்தார்.