பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் அருண் ஜேட்லி துணை பிரதமர்.. : பிரசாரத்தில் பஞ்சாப் முதல்வர் பாதல்
அட்டாரி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அருண் ஜேட்லிதான் துணை பிரதமர் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறியுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்த அருண் ஜேட்லி முதல் முறையாக லோக்சபா தேர்தலில் குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிடும் அருண் ஜேட்லியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கை களமிறக்கியது.
அமிர்தசரஸ் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அருண் ஜேட்லி துணைப் பிரதமராவார். அல்லது நாட்டின் நிதி அமைச்சராவார் என்று கூறினார்.
பாரதிய ஜனதாவில் துணை பிரதமர் பதவியாவது கிடைக்காதா என மூத்த தலைவர்கள் பலரும் ஏங்கிக் கிடக்கும் நிலையில் அருண்ஜேட்லியை கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் அந்த பதவிக்கு முன்னிறுத்தியிருப்பது புதிய சலசலப்புக்கு அடித்தளம் போட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.