இந்தாண்டு சொத்து மதிப்பை முதல் ஆளாக வெளியிட்டார் அருண் ஜெட்லி...கடந்த ஆண்டை விட 8.9% குறைவு !
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, இந்தாண்டுக்கான தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரதம அலுவலக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு அவரின் சொத்து மதிப்பு, 8.9% குறைந்துள்ளது.
பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, 2014-15 நிதியாண்டில் ஜெட்லியின் மொத்த சொத்து மதிப்பு, ரூ.67.01 கோடியாக இருந்தது. இதுவே, 2015-16 நிதியாண்டில் ரூ.60.99 கோடியாக குறைந்துள்ளது.
முந்தைய நிதியாண்டை விட தற்போது, ஜெட்லியின் தங்க நகைகள் மீதான மதிப்பு, ரூ.9.9 லட்சம் கூடியுள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் இருப்பு, ரூ.3.52 கோடியில் இருந்து, ரூ.1 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல் கார்களின் எண்ணிக்கையும், 5-ல் இருந்து 4-ஆக குறைந்துள்ளது.
ரொக்க கையிருப்பு மற்றும் வங்கிக் கணக்கிலும் முந்தைய ஆண்டை விட இந்தாண்டு குறைவான தொகையே உள்ளதாக ஜெட்லி வெளியிட்டிருக்கும் சொத்து விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 3 வீடுகளும், ஹரியாணா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வீடும் உள்ளன. அதில் 5 சொத்துக்களும் மனைவி சங்கீதா ஜெட்லியின் பெயரிலும் கூட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் 3 சேமிப்புக் கணக்குகளும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஒரு சேமிப்புக் கணக்கும் வைத்துள்ளார். மியூச்சுவல் ஃபண்டு போன்ற எதிலும் ஜெட்லி முதலீடு செய்யவில்லை. கம்பெனி டெபாசிட்டுகளாக மட்டும், எம்ப்ரியோ ஆயில்ஸ் மற்றும் டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனங்களில் ரூ.16 கோடி முதலீடு செய்துள்ளார்.
அருண் ஜெட்லி, சொந்தமாக 2 மெர்சிடெஸ் கார்களை வைத்துள்ளார். ஒரு டொயாட்டோ ஃபார்ச்சூனர், ஹோண்டா அக்கார்ட் கார்களையும் வைத்திருக்கிறார். கடந்த நிதியாண்டில் அவரிடம் பிஎம்டபிள்யூ கார் இருந்தது. இந்த நிதியாண்டில் அதனை விற்று விட்டார்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் ஜெட்லி மட்டுமே இந்தாண்டு சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.