கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு- காங். போல மத்திய அமைச்சர்கள் புடைசூழ கோர்ட்டுக்கு போன அருண் ஜேட்லி!!
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் செய்ததாக அவதூறு பரப்பியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்காக மத்திய அமைச்சர்களுடன் அருண்ஜேட்லி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகம் மீண்டும் பரபரப்பு களமாகி இருக்கிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம் டிசம்பர் 19-ந் தேதி இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இதனை ஏற்று சோனியாவும் ராகுல் காந்தியும் கடந்த சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் இருவர் மட்டும் ஆஜராகாமல் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை டெல்லி நீதிமன்றத்துக்கு அழைத்துவிட்டது அக்கட்சி மேலிடம்.
அத்துடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி தொடங்கி ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி நீதிமன்றத்துக்கு படையெடுக்க அந்த வளாகமே பெரும் பரபரப்பாகிப் போனது. இதில் சோனியாவும் ராகுலும் சிறிது நேரம் நடந்தே வந்து நீதிமன்றத்துக்கு வந்து பரபரப்பை கிளப்பினர்.
அன்று முழுவதுமே காங்கிரஸ் கட்சியின் நீதிமன்றத்தின் படையெடுப்புதான் ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம்பெற்றது. இப்படி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துவிட பா.ஜ.க. அப்செட் ஆகிப் போனது.
இதை முறியடிக்க காங்கிரஸ் பாணியில் இன்று மத்திய அமைச்சர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்குப் படையெடுத்தனர். அதாவது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஊழல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதை நிராகரித்து வரும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக தெரிவித்திருந்தார். இந்த அவதூறு வழக்கில் தமது பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றத்துக்கு அருண் ஜேட்லி சென்றார்.
அவருடன் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பியூஸ் கோயல், ஸ்மிருதி இரானி, நட்டா என பெரும் படையே சென்றது. இதனால் டெல்லி நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்புக்குள்ளானது.
ரூ10 கோடி நட்ட ஈடு
நீதிமன்றத்தில் ஜேட்லி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட முறைகேடாக ஜேட்லி எடுக்கவில்லை என வாதாடினார்.
மேலும் ஜேட்லி மீது திட்டமிட்டே ஆம் ஆத்மி கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர்; இதற்காக ஜேட்லிக்கு ரூ10 கோடி நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ஆம் ஆத்மி கட்சி என்ன செய்யப் போகுதோ?