நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது காங்கிரஸ்- ஜேட்லி
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது. இதனால் ஏழ்மை அதிகரித்துவிட்டது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தில் பேசிய அருண் ஜெட்லி, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துவிட்டது.
நாட்டுக்குக் கிடைத்த பல நல்ல வாய்ப்புக்களை காங்கிரஸ் அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. உலகளவில் மிகக் குறைவான விலையில் உற்பத்தி செய்யும் கேந்திரமாக இந்தியாவை உருவாக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை காங்கிரஸ் அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இனியும் அது போன்ற வாய்ப்புகளை நாம் இழக்க முடியாது.
காங்கிரஸ் அரசு விட்டுச் சென்ற பொருளாதாரத்தை சீர்திருத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைவால் வரி வசூல் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடுகளைப் பெருக்க வர்த்தகம் செய்வதற்கான செலவுகளை குறைப்பது அவசியம். புதிய அரசிடம், அரசியல் ரீதியிலான எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
நாடு முழுவதிலும் ஒரே சீரான சரக்கு, சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இதேபோல் விலைவாசி அதிகரிப்புக்கு காரணமாக விளங்கும் காரணிகளான பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் பொருள்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
நிபுணர்களுடன் ஆலோசனை
இந்நிலையில், மத்திய பட்ஜெட் தயாரிப்பது குறித்து, பொருளாதார நிபுணர்களுடன் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார நிபுணர்கள், வரிவிதிப்பு சதவீதத்தை குறைத்தல், செஸ் வரியை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்ததாக தெரிவித்தனர்.