மானியக் குறைப்பு, அன்னிய முதலீடுகள், வரி விலக்கில் சலுகை.. நாளைய பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாளை தனது முதல் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. நிதியமைச்சராக அருண் ஜேட்லி தாக்கல் செய்யப் போகும் முதல் பட்ஜெட்டும் இது என்பதால் எதிர்பார்ப்புகள் ஏராளமாக உள்ளன.
ஆனால் ரயில்வே பட்ஜெட்டைப் பார்த்தால் பொது பட்ஜெட்டின் டிரெய்லர் போலவே அது தோன்றுகிறது. எனவே ரயில்வே் பட்ஜெட்டில் பிரதிபலித்த பல முக்கிய அம்சங்கள், மோடி அரசின் இலக்கு, நோக்கம், திட்டம் ஆகியவற்றை நிச்சயம் நாளைய பொது பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடியதாக நாளைய பொது பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைத்தான் ரயில்வே பட்ஜெட்டும் நமக்குக் காட்டியுள்ளது. அந்த அடிப்படையில் நாளைய பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறலாம் என்பது குறித்த ஒரு பார்வை...
வருமான வரி உச்சவரம்பு
நடுத்தர மக்கள் குறிப்பாக மாத ஊதியம் வாங்குவோர்தான் பெருமளவில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு சற்று இளைப்பாறுதலைத் தரும் வகையில், நீண்ட கால நிதி சேமிப்புகளுக்கான வருமான வரி உச்சவரம்பு சற்று உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அனேகமாக இது இரட்டிப்பாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தற்போது இது ரூ. 1 லட்சமாக உள்ளது.
என்ன பலன் கிடைக்கும்...
ரூ. 2 லட்சமாக இதை உயர்த்தும்போது, வருடத்திற்கு ரூ. 10லட்சத்திற்கு மேல் போவோருக்கு ஆண்டு தோறும் ரூ. 30,000 மிச்சமாகும். ரூ. 5 முதல் 10 லட்சம் வரையிலான வருட ஊதியம் பெறுவோருக்கு ரூ. 20,000 சேமிப்பாகும். ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியதாரர்களுக்கு ரூ. 10,000 மிச்சமாகும்.
ஆனால் கசப்பு மருந்து கட்டாயம்
அதேசமயம் கசப்பு மருந்து கட்டாயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இதை ரயில்வே பட்ஜெட்டிலேயே கூறி விட்டது மோடி அரசு. பொது பட்ஜெட்டிலும் இந்த மருந்து கண்டிப்பாக கொடுக்கப்படும்.
மானியங்கள் குறையும்
குறிப்பாக எரிபொருள், உணவு, உரம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் மானியங்கள் கணிசமாக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
வளர்ச்சிக்கு முன்னுரிமை
வளர்ச்சியைக் குறி வைத்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகர்களுக்கு ஆதரவாக
மேலும் தொழில் நிறுவனங்கள், தொழில்துறையினர், வர்த்தகத்துறையினருக்கு சாதகமான பல அம்சங்களும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நேரடி அன்னிய முதலீடுகள் - தனியார்மயமாக்கம்
நேரடி அன்னிய முதலீடுகளுக்கு நல்ல ஆதரவு தரப்படும் என்றும் தெரிகிறது. குறிப்பாக பல முக்கிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் நேரடி அன்னிய முதலீடுகள் கதவு திறந்து விடப்படும் என்று தெரிகிறது. அதேபோல பல திட்டங்களில் தனியார் கூட்டுக்கும் பிள்ளையார் சுழி போடப்படலாம்.
குஜராத் மாடல்
குஜராத்தில் வர்த்தகத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார் மோடி. அதே பாணியில் இப்போதும் வர்த்தக வளர்ச்சிக்கு முன்னுரிமை தரும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிச் சீர்திருத்தங்கள்
பல்வேறு வரிச் சீர்திருத்தங்களை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பல முக்கியத் துறைகளில் நேரடி அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்புகளும் வெளியாகும் என்றும் தெரிகிறது.
நலிவடைந்தவை விற்கப்படும்
ஸ்டீல், நிலக்கரி, பெட்ரோலிய நிறுவனங்களில் நலிவடைந்த நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.
பாதுகாப்புத் துறையிலும் வெளிநாட்டு முதலீடுகள்
பாதுகாப்புத்துறை மற்றும் ஈ காமர்ஸ் ஆகிய துறைகளில் நேரடி அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் சில சலுகைகளை அறிவித்து விட்டு வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு பல அதிரடியான கசப்பு மருந்துகள் நிறைந்த பட்ஜெட்டாக இது இருக்கலாம் என்றும் பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.