வருமான வரி.. உங்கள் பாக்கெட்டில் ஜேட்லி பால் ஊற்றுவாரா?.. பாக்கெட்டை கிழிப்பாரா?
டெல்லி: மாத ஊதியம் வாங்குவோரின் பாக்கெட்டுகளில் இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதியைச்சர் அருண் ஜேட்லி பால் ஊற்றுவாரா அல்லது பாக்கெட்டை கிழிப்பாரா என்று பொருளாதார நிபுணர்களிடையே விவாதம் நடந்து வருகிறது.
மாத ஊதியம் பெறுவோருக்கு தற்போது ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான ஊதியத்துக்கு வருமான வரி இல்லை. 2 லட்சத்துக்கு மேலான வருமானத்தில் இருந்து வரி ஆரம்பிக்கிறது.
முகர்ஜியும் செய்யலை, சிதம்பரமும் செய்யலை..
இந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும் மாத ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கில் எந்த சலுகையும் அளிக்கவில்லை. குறிப்பாக கடைசி 3 பட்ஜெட்களில் சிறிய சலுகை கூட தரப்படவில்லை.
ரூ. 2 லட்சமாக உயருமா?
இந் நிலையில் பாஜகவின் முக்கிய ஓட்டு வங்கியான நடுத்தர வர்க்கத்தினரை திருப்திப்படுத்த வேண்டிய நிலையில் பிரதமர் மோடி அரசு உள்ளது. இதனால் மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரூ. 2 லட்சத்தில் இருந்து கொஞ்சமாவது உயர்த்துவார் என்ற தீவிர நம்பிக்கை நிலவி வருகிறது.
குறைந்தபட்சம் இதை ரூ. 3 லட்சமாக உயர்த்தினால் கூட வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரையாவது மிஞ்சும். இதைச் செய்தால் நடுத்தர மக்களின் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். இது மீண்டும் பல வகைகளில் சந்தைக்கு வரும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் ஒரு பிரிவு நிபுணர்கள்.
வரி செலுத்துவோர் 3 சதவீதமே...
ஆனால், நாட்டில் 3 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வருமான வரி செலுத்துகின்றனர். குறிப்பாக மாத ஊதியம் வாங்குவோர் தான் வரியை மிகச் சரியாக செலுத்துகின்றனர். அதாவது வரியை பிடித்துவிட்டே இவர்கள் கையில் சம்பளம் தரப்படுகிறது. மற்ற பிரிவினரில் பெரும்பாலானோர் வருமான வரியே செலுத்துவதில்லை. இன்னொரு தரப்பினர் வருமானத்தை குறைத்துக் காட்டி வரியை குறைவாக கட்டி வருகின்றனர்.
மாத ஊதியம் பெறாதவர்களில் மிக நியாயமாக வரி செலுத்துவோர் மிகக் குறைவு.
சந்தேகம் தான்...
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 2.1 சதவீதம் வருமான வரியில் இருந்து தான் வருகிறது. டீசல், உணவு, உரத்துக்கான மானியத்துக்கு மத்திய அரசு செலவிடும் மொத்த பணத்துக்கு இணையானது நாட்டின் வருமான வரி மூலம் திரட்டப்படும் நிதி.
இதனால் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ஜேட்லி உயர்த்துவாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர் இன்னொரு பிரிவு பொருளாதார நிபுணர்கள்.
வருமான வரியைக் குறைத்தால் என்ன நடக்கும்?
வருமான வரியைக் குறைத்தால் 1. மானியங்களை மத்திய அரசு குறைத்தாக வேண்டும். இது ஓட்டு விழுவதை பாதிக்கும்.
2. கார்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அதிகரிக்க வேண்டும். இவர்கள் பாஜகவுக்கும் மிக வேண்டியவர்கள். இதை உயர்த்தினால் பொருளாதாரம் மந்தமடையும்.
3. அதே போல மறைமுக வரிகளை உயர்த்தியாக வேண்டும். இதைச் செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும்.
இது போன்ற காரணங்களால் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படாது என்பது இன்னொரு பிரிவு நிபுணர்களின் கருத்து.
அக்கெளன்ட்ஸ் டிபார்ட்மெண்ட் அக்கப்போர்...
அதே போல எனக்கு இந்த மாசம் சம்பளம் ரொம்ப கம்மியா வந்துருக்கு என்று உங்கள் அலுவலகத்தின் அக்கெளன்ட்ஸ் டிபார்ட்மெண்ட் பக்கம் போனால் 80C என்று பிரிவைப் பற்றி சொல்வார்கள்.
இது வீட்டு லோன், பிஎப், பத்திரங்களில் முதலீடு, இன்சூரன்ஸ் பாலிஸி ஆகியற்றுடன் தொடர்புடையது. மேலே சொன்னவற்றில் பணத்தைப் போட்டால் கொஞ்சம் வருமான வரி குறையும். ஆனால், இந்த 80C -ல் ரூ. 1 லட்சம் வரை தான் அதிகபட்சமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் நீங்கள் சேமித்தாலும் பலனில்லை. அதெல்லாம் வரிக்கணக்கில் வந்துவிடும்.
வீட்டுக் கடன்...
வீட்டுக் கடனுக்கு மாதம் ரூ. 10,000, பிஎப் மாதம் ரூ. 2,000 கட்டினாலே ஆண்டுக்கு இது 1.34 லட்சம் ஆகிவிடும். ஆனால், ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும். இதையாவது ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக உள்ளது.
ஆனால், இதை ரூ. 1.5 லட்சமாக உயர்த்தினாலே மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60,000 கோடி நஷ்டம் வந்துவிடுமாம். இதை ஜேட்லி ஏன் செய்யப் போகிறார்?
அதே போல லோனுக்கு வாங்கிய வீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தப்படும் வட்டிக்கு இப்போது வரி இல்லை. இதையாவது ரூ. 3 லட்சமாக உயர்த்தினால் கொஞ்சம் பெரிய வீட்டையாவது வாங்கலாம்.. அல்லது வாங்கிய வீட்டுக்கு கட்டும் வட்டியிலிருந்து கொஞ்சம் தப்பலாம்.
இது ரொம்ப கொடுமை...
நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ நிச்சயமாக மாதாமாதம் மருந்துகளுக்கும் டாக்டருக்கும் செலவு செய்தே ஆகிறோம். ஆனால், medical reimbursement என்ற பெயரில் மாதம் ரூ. 1,200 மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கிறது நமது வருமான வரி. அதாவது ஆண்டுக்கு மருத்துவ செலவுகளுக்கு ரூ. 15,000க்கு மட்டுமே வரி விலக்கு. அதற்கு மேல் செலவிட்டால் வரி விலக்கு இல்லை.
பல் பிடுங்க போனால் கூட 4 சிட்டிங் வரச் சொல்லி ரூ. 10,000 பில் போடும் காலத்தில் ஆண்டுக்கு குடும்பத்துக்கே ரூ. 15,000 தான் மருத்துவ வரி விலக்கு என்பது சந்திர குப்த மெளரியர் காலத்து ரூல். இதை ஜேட்லி உயர்த்தினால் புண்ணியமாய் போகும்.
மிஞ்சுவது பாக்கெட்டா.. அல்லது
11 மணிக்கு ஜேட்லி பெட்டியைத் திறந்தால் தான் நமது பாக்கெட்டில் மிஞ்சப் போவது பணமா?, அல்லது வெறும் ஏடிஎம் ஸ்லிப்பா என்பது தெரியவரும்.