குஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி.. அருண் ஜேட்லி
டெல்லி: குஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவேதான் பாஜகவுக்கு அங்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
அடுத்த மாதம் மாநில தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தற்போது அந்த ஊடகங்களின் கருத்து கணிப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பில் பாஜக மீண்டும் பெரும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜேட்லி டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியால் எப்போதும் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஜாதி அரசியலை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி ஒரு தோற்றுப்போன தலைவர்.
குஜராத் மாநிலம் வரலாறு காணாத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத் மாடல் கண்டிப்பாக பாஜகவிற்கு மீண்டும் வெற்றியை தேடித்தரும். பாஜக கட்சியில்தான் முழுமையான மத நல்லிணக்கம் நிலவுகிறது என்றார் ஜேட்லி
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.