பட்ஜெட் 2017 : ரூ. 10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு - அருண் ஜெட்லி
2017-18 ஆம் நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இது கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகமாகும்.
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று பலத்த எதிர்ப்புக்கு இடையே இன்று 2017 - 18ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. தனது உரையை தொடங்கும் முன்பாக இன்று வசந்த பஞ்சமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வசந்த பஞ்சமி வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். எனவே இந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் ஜெட்லி.
அவரது இன்றைய உரையில் விவசாயிகள், விவசாயத்திற்கும், பயிர் காப்பீடு திட்டம், விவசாய கடன், விளைபொருட்கள் பாதுகாப்பிற்கு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
அருண் ஜெட்லி உரையின் முக்கிய அம்சங்கள்:
•நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.
•2017- 18 நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகமாகும்.
•கடந்த ஆண்டு சுமார் ரூ. 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
•பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது.
•தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும் என்றார்
•நாட்டின் பணவீக்கம் கட்டுக்கள் உள்ளது.
•பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு வங்கி மூலம் ரூ. 8000 கோடி
•விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள்
•2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு
•பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்