பட்ஜெட்டுக்கு ஜேட்லி மனைவியின் மதிப்பெண் என்ன தெரியுமா?
மத்திய பட்ஜெட்டுக்கு நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி 9 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்.
டெல்லி : நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டிற்கு அவருடைய மனைவி சங்கீதா ஜேட்லி 10க்கு 9 மதிப்பெண் கொடுத்திருக்கிறார். மனித பிழை இருப்பதால் முழு 10 மதிப்பெண் கொடுக்கவில்லை என்று சங்கீதா ஜேட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அருண்ஜேட்லியின் அறிவிப்புகளை எதிர்பார்த்து நாட்டு மக்களே காத்திருந்தது போல அவருடைய குடும்பத்தாரும் ஜேட்லியின் பட்ஜெட் உரையை காண நாடாளுமன்றம் வந்திருந்தனர்.
ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி, மகன் ரோகன் ஜேட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் நாடாளுமன்றம் வந்திருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தவாறு ஜேட்லியின் சுமார் 2 மணி நேர பட்ஜெட் உரையை கேட்டனர்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ஜேட்லி, என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு எதிர்க்கட்சிகளின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டுக்கு ஜேட்லியின் சகோதரி மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பார்கவா கூறினார்.
இதே போன்று அருண்ஜேட்லியின் மகனும் தந்தையின் பட்ஜெட்டிற்கு முதல் மார்க் கொடுத்துள்ளார். ஜேட்லியின் மகன் ரோகன் ஜேட்லி இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என்று கூறினார்.