நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர்கள் புறக்கணிப்பதா? அருண் ஜேட்லி கொந்தளிப்பு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் 9 மாநில முதல்வர்கள் உட்பட 12 முதல்வர்கள் புறக்கணித்தது கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்புடையது அல்ல என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் தவிர தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய கூட்டத்தில் 16 மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:
நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த மாநில முதல்வர்கள் தங்கள் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்புடையதா என்பதை சுய பரிசோதனை செய்வது நன்று.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மாநில முதல்வர்களும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்த தாமதிப்பது வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
சில மாநிலத்தின் முதல்வர்கள் இந்த சட்டத்தில் ஒன்று மத்திய அரசு அனைவரும் ஏற்கும் வண்ணத்தில் ஒருமித்த முடிவை எட்ட வேண்டும். இல்லையேல் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப சட்டத்தை அமைத்துக் கொள்ள உரிமை அளிக்க வேண்டும் என யோசனை கூறியுள்ளனர்.
இவ்வாறு அருண்ஜேட்லி கூறினார்.