ப.சிதம்பரத்தின் பேச்சு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும்.. ஜெட்லி கடும் கண்டனம்
காஷ்மீரில் பிரிவினைவாதத்தை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார் மத்தியமைச்சர் அருண் ஜெட்லி.
டெல்லி : ஆளும் மத்தியரசு காஷ்மீருக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்கவேண்டும் என்கிற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு ஜெட்லி காரசாரமாக பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க தவறான முடிவுகளையே எடுத்துவருகிறது. அந்த மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சட்டத்தின் வகையிலேயே தன்னாட்சியை எதிர்பார்க்கிறார்கள். இதை வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்றும், இந்த விவகாரத்தில் மேலும் பா.ஜ.க காலம் தாழ்த்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
தேச நலன்
இதற்கு நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்தார். ப.சிதம்பரத்தின் இந்தப் பேச்சு தேசிய நலன்களுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கண்துடைப்பு
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெட்லி, ‘ தன்னாட்சி அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் இப்போது சொல்வது எல்லாம் கண் துடைப்பே. அரசியல் செய்ய வேறு வழி இல்லாமல் காங்கிரஸ் இப்போது காஷ்மீரில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்றார்.
ரொம்ப நாள் பிரச்சினை
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு மட்டுமே பங்கு இருப்பது போல ப.சிதம்பரம் பேசி வருகிறார். வரலாற்றை அவருக்கு நான் நினைவு கூற விரும்புகிறேன். 1947ல் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்ததில் இருந்தே இந்தப் பிரச்னை இருந்துவருகிறது.
காங்கிரஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
அதற்குப்பிறகு இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் இந்தப் விவகாரத்தில் முடிவு எதுவும் எடுக்காமல், தற்போது பா.ஜ.க.,வை விமர்சித்து வருவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மோசமான நடவடிக்கைகளால் தான் காஷ்மீர் தற்போது இந்த நிலையில் இருக்கிறது.
யோசியுங்கள்
பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இனியும் காஷ்மீர் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, யோசித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சிதம்பரத்தின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தா என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.