ரபேல் ஊழல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: முன்னாள் மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு
ரபேல் ஊழல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: முன்னாள் மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு
டெல்லி: பாதுகாப்புத் துறையின் ரபேல் விமான ஊழல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நேற்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது அருண் ஷோரி கூறுகையில், ரபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தம் கிடைக்க வேண்டிய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெளியே தள்ளப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துக்கு அதிக விலையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ரபேல் விமான ஊழலோடு ஒப்பிடுகையில் போஃபர்ஸ் ஊழல் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரபேல் ஊழல் விவகாரத்தில், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்ஷங்கரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கூறுகையில், 2007 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 126 விமானங்கள் வாங்க பரிந்துரைக்கப்பட்டதற்கு மாறாக புதிய ஒப்பந்தப்படி 36 விமானங்கள் வாங்கப்படுவது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்கள்" என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
இப்படி வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைத்ததை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் ஒருவருக்கு கூடவா தெரியாது என்று பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாத் பூஷன் கூட்டாக கூறுகையில், விமானங்களை தயாரிப்பதில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு தனியார் நிறுவனத்துக்கு பெரிய அளவில் பண ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது இது குறித்து சிஏஜி தணிக்கை விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாத் பூஷன் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை எழுப்புபவர்கள் அவர்களுடைய பொறுப்பை உணர வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக குறுகிய எண்ணத்தில் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.