அருணாச்சல பிரதேச ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா நீக்கம் - பிரணாப் உத்தரவு
டெல்லி: அருணாச்சல பிரதேச ஆளுநர் பதவியில் இருந்து ஜோதி பிரசாத் ராஜ்கோவா நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மேகாலய ஆளுநரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளான கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, உடல்நலக்குறைவு காரணமாக நீண்டகால விடுப்பில் இருந்தார். இதனால், அவரை பதவி விலகும்படி மத்திய அரசு கூறியதாகவும், பதவிவிலக மறுத்தால் அவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை அணுகலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் அருணாச்சல பிரதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கவர்னர் ராஜ்கோவா, பதவி விலக முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். ஜனாதிபதி தன்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அத்துடன், தனது பதவி குறித்து ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை அவர் உள்துறைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பில் இருந்து ராஜ்கோவாவை குடியரசுத் தலைவர் நேற்று நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். நிரந்தர ஆளுநர் நியமிக்கும்வரை, மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவித்துள்ளார்.