தேசிய விருதை திருப்பி ஒப்படைத்தார் அருந்ததிராய்... இந்துத்துவாவாதிகள் மீது கடும் பாய்ச்சல்!
டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு எதிராக தமது தேசிய விருதை எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி ஒப்படைத்துள்ளார். சகிப்பின்மை என்ற பெயரில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதாக அருந்ததிராய் கடுமையாக சாடியுள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக படுகொலை, எதிர்கருத்துகளை பேசியதற்காக படுகொலை என அண்மைக்காலமாக சகிப்பின்மையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் அதிகரித்து வரும் இந்த சகிப்பின்மைக்கு எதிராக எழுத்தாளர்கள், படைப்பாளிகள், விஞ்ஞானிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விருது ஒப்படைப்புக்கு நிகழ்வுக்கு எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் In Which Annie Gives it Those Ones என்ற திரைப்படத்துக்காக தமக்கு வழங்கப்பட்ட சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவில் தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தீவிரவாதம் சூழ்ந்த ஒரு நிலையில் தங்களுக்கு எப்போது என்ன நடக்கும், யார் நம்மை என்ன செய்வார்களோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.
வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த தேசத்தில் தலித்துகள் கழுத்தறுக்கப்படும் எரித்துக் கொல்லப்படுவதும் தொடர்கிறது. விருதுகளை திருப்பி ஒப்படைக்கிற இந்த அரசியல் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.