இந்தியாவின் முதலாவது "கார்ப்பரேட் ஏஜெண்ட்" மகாத்மா காந்தி: சாடுவது அருந்ததிராய்
கோரக்பூர்: இந்தியாவின் முதலாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர் மகாத்மா காந்தி என்று எழுத்தாளர் அருந்ததிராய் பேசியது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அண்மையில் மகாத்மா காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து தமது வலைப்பக்கத்தில் எழுதி வந்தார். காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும் அவரது கொள்கைகள் முட்டாள்தனமானவை என்றும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ராஜ்யசபாவில் கட்ஜூவுக்கு எதிராக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடைபெற்ற 10வது திரைப்பட விழாவில் பேசிய புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் காந்தியை விமர்சித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அருந்ததிராய் பேசியதாவது:
நாட்டில் வழிபாட்டுக்குரியவராக இருக்கும் காந்தியைப் பற்றி பொய்யான கற்பிதங்கள் கற்பிக்கப்படுகின்றன. தலித்துகள், பெண்கள் மற்றும் ஏழைகளைப் பற்றி மிக மோசமாக அவர் எழுதியுள்ளார்.
இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடனான முதலாவது தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தியவர் மகாத்மா காந்தி. அவர் இந்த நாட்டின் முதலாவது கார்ப்பரேட்டுகளின் ஏஜெண்ட்.
1909 ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டு காந்தி எழுதிய எழுத்துகளை நன்கு படித்த பின்னரே நான் இக்கருத்தை முன்வைக்கிறேன். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிதான் இருக்கிறார். ஆனால் அம்பானிகளுக்கும் டாட்டாக்களுக்குமான விருப்பமானவராகத்தான் அவர் செயல்படுகிறார்.
இவ்வாறு அருந்ததிராய் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு அரங்கத்திலேயே சில இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அருந்ததிராய் தமது கருத்தை நியாயப்படுத்தியே பேசினார்.