பிர்லா குழுமத்திடமிருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி?... கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு
கடந்த 2012 ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஆதித்யா பிர்லா குழுமத்திடமிருந்து ரூ 25 கோடி லஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆதித்யா பிர்லா நிறுவனத்திடம் இருந்து ரூ 25 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி மாநில அரசு இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆதித்யா பிர்லா நிறுவனத்திடமிருந்து 25 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, டெல்லியில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 2013ம் ஆண்டு சோதனை நடத்தியனர். இந்த சோதனையின் போது ஆதித்ய பிர்லா குழுமத்தில் பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டது. இது வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நவம்பர் 16, 2012 தேதியிட்ட குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும். அதில் குஜராத் முதல்வர் ரூ.25 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது எனவும், எனவே குஜராத் முதல்வருக்கு அப்போது ரூ.25 கோடி அளிக்கப்பட்டது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், இந்த சோதனையின் போது ஒரு மடிக்கணினி, மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் மோடி குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில், ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் மீது கருப்பு பண புகார் மற்றும் லஞ்ச புகார் எழுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி ரூ 25 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக கெஜ்ரிவால் கிளப்பியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.