தலைமைச் செயலாளரை எம்எல்ஏக்கள் அடிச்சாங்க.. நான் பார்த்தேன்.. போட்டு உடைத்த கேஜ்ரிவால் உதவியாளர்
டெல்லி: கேஜ்ரிவால் உதவியாளர் விகே ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, தலைமைச் செயலாளரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதை தான் நேரில் பார்த்ததாக, போலீசிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த 19ம் தேதி இரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அம்மாநில அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அன்ஷு பிரகாஷை தாக்கியதாகவும் தெரிகிறது.
டெல்லியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக, சிவில் லைன் போலீசில் தலைமை செயலாளர் புகார் செய்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கேஜ்ரிவால் உதவியாளர் விகே ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, தலைமைச் செயலாளரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதை தான் நேரில் பார்த்ததாக விகே ஜெயின் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஜெயினின் வாக்கு மூலம் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இதுவரை தாங்கள் தலைமை செயலாளரை தாக்கவில்லை என கூறிவந்தனர். ஆனால் தலைமை செயலாளர் முகத்தில் அடி பட்டதற்கான காயத் தழும்புகள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
இந்த நிலையில் கேஜ்ரிவால் இல்லத்தில் இன்று திடீரென போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சம்பவ தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அவர்கள் சேகரிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல்வர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.