நேர்மையான அதிகாரிகள் என்னை தொடர்பு கொள்ளவும்: கெஜ்ரிவால் அழைப்பு
டெல்லி: நேர்மையான அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொள்ளவும், நான் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
வரும் சனிக்கிழமை காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் தங்களது அரசில் நேர்மையான அதிகாரிகளைப் பணி அமர்த்தும் வேலையில் தீவிரமான உள்ளது ஆம் ஆத்மி.
அந்தவகையில், நேர்மையான அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தங்கள் ஆட்சியில் பதவி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் என ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :-
நேர்மையான அதிகாரிகள் என்னை கடிதங்கள், இமெயில் மற்றும் குறுந்தகவல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு என்னைத் தொடர்பு கொள்ளும் அதிகாரிகளின் நேர்மையை பரிசீலித்து அவர்களுக்கு எங்கள் ஆட்சியில் பதவி உயர்வு வழங்கப் படும்.
மேலும், அரசு செயல்பாட்டில் அவர்களது உத்திகள் பற்றி முடிவெடுக்கப் படும். அதேபோல், தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட நேர்மையான அதிகாரிகளின் மேல் முறையீடு செய்தால், அவர்களது ஓய்வு ஊதியம் மற்றும் மருத்துவ பண விவகாரங்கள் விரைவாக கிடைக்கப் படும் படி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.