அம்பானி குறித்த உங்கள் நிலையை தெளிவு படுத்துங்கள்: மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்
டெல்லி: முகேஷ் அம்பானி குறித்து தான் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தக்க பதிலளிக்குமாறு பாஜக பிரதம வேட்பாளரான மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், கடந்த ஞாயிறன்று தனதுடுவிட்டர் பக்கத்தில் ராகுலும், மோடியும் அம்பானியின் முகவர்களாக செயல் படுகிறார்கள் என குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும், இது குறித்து தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கெஜ்ரிவால். அதில், ‘முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக காஸ் விலை உயர்த்தப்பட்டதாக தான் கூறிய குற்றசாட்டு தொடர்பாக தங்கள் நிலையை தெளிவு படுத்த வேண்டும். மேலும் தாங்கள் பிரதமரானால் கேஸ் விலையைக் குறைப்பீர்களா?' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுத கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். மேலும், பல்வேறு மொழிகளில் நாடுமுழுவதும் 10 கோடி துண்டு பிரச்சாரங்கள் மூலம் வினியோகம் செய்யவும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, கெஜ்ரிவால் தான் டெல்லி முதல்வராக இருந்தபோது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அமைச்சர்களும், சில அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதி செய்ததாக கூறி, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.