முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் முன் நிற்கும் சவால்கள்!
டெல்லி: டெல்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
டெல்லியின் ஏழாவது முதல்வராக இளம் வயதிலேயே பதவியேற்கும் அரவிந்த் கேஜ்ரிவால், பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்துக்கு மெட்ரோ ரயிலில் வந்தார்.
அவரைப்போல அமைச்சர்களாக பதவியேற்பவர்களும் மெட்ரோரயிலில் வந்தனர்.
ராக்கி பிர்லா, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி சவுரப் பரத்வாஜ், கிரீஷ் சோனி சத்யேந்திர ஜெயின் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் ராக்கி பிர்லாதான் இளம் அமைச்சர்.
பொதுமக்களுக்கு அழைப்பு
ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஐபிக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டது. மாறாக பொதுமக்கள் திரளாகக் கலந்த கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது அழைப்பினை ஏற்று ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
காந்தி நினைவிடம்
பதவியேற்பு விழா நிறைவடைந்த உடனேயே, தலைமைச் செயலகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, ராஜ்காட்டுக்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தப் போவதாக கேஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
முதல் அமைச்சரவைக்கூட்டம்
தொடர்ந்து 2 மணிக்கு, புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில், டெல்லி ஆட்டோ டிரைவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
முன் நிற்கும் சவால்கள்
அவர் உடனடியாக எதிர்கொள்ளவேண்டிய சவால்கள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். டெல்லி ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது, டெல்லி நகரில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றுக்கும் இலவசமாக 700 லிட்டர் குடிநீர் விநியோகிப்பது ஆகியவை அவரது வாக்குறுதிகளில் சில.பதவிக்கு வந்த 15 நாளில் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது இந்த கட்சியின் முக்கிய வாக்குறுதி. டெல்லி அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், முதல்வர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஜன லோக்பால் வரம்பில் வருவார்கள்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கேஜ்ரிவால் கட்சி, முந்தைய ஷீலா தீட்சித் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவால் என்ன செய்யப்போகிறார் என்பது அனைவராலும் உற்று நோக்கப்படும் விஷயமாக இருக்கிறது.
ஹசாரேவுக்கு அழைப்பு
பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அண்ணா ஹசாரேவுக்கு வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தார் கேஜ்ரிவால். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேஜ்ரிவால் அழைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அன்னா ஹசாரேவும், வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடியும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.