டெல்லியின் இளம் முதல்வர் கெஜ்ரிவால் எதிர் நோக்கியிருக்கும் 3 சவால்கள்
டெல்லி: காங்கிரசின் குழப்பமான ஆதரவு, பா.ஜ.,வின் கடுமையான விமர்சனம், கட்சிக்குள் கருத்துவேறுபாடு என பலதரப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா என நிலவிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
ஆனபோதும், ஆட்சியில் அமர்ந்ததும் கெஜ்ரிவால் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள் மூன்று உள்ளன. அவை ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப் பட்டுள்ளதை நிறைவேற்றுவது தான்.
மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியுமா என முன்னெச்சரிக்கையாக கெஜ்ரிவால் வினா எழுப்பியுள்ள போதும், தனது வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் அக்கட்சியினர் உள்ளனர்.
காங்கிரஸ் ஆதரவு....
70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. 32 இடங்கள் பெற்று முதலிடத்தில் இருந்த பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது என, ஒதுங்கிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து எட்டு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ஆம் ஆத்மி கட்சிக்கு, ஆதரவு அளிக்க முன்வந்ததை அடுத்து, அக்கட்சிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மக்கள் விருப்பம்...
ஆனாலும், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுப்போம் என, கூறி, டெல்லி முழுவதும், ஆம் ஆத்மி கட்சி, தெருமுனை கூட்டங்களை நடத்தியது. இமெயில் எஸ்.எம்.எஸ்., மூலமும், மக்களிடம் கருத்துகளைக் கேட்டது. அதனைத் தொடர்ந்து, மக்களின் விருப்பத்திற்கிணங்க டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி முடிவெடுத்தது.
ஆம் ஆத்மி சம்மதம்...
அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சி டெல்லி கவர்னரைச் சந்தித்து தனது சம்மதத்தைத் தெரிவித்தது. வரும் 26ம் தேதி ராம்லீலா மைதானத்தில் வைத்து பதவியேற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
எல்லாப் புகழும் கட்சிக்கே....
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி தான். நானல்ல. அதேபோல், டெல்லியின் முதல்வர் என்ற பெருமையும் கட்சிக்கே சேரும் தனிப்பட்ட எனக்கல்ல' எனத் தெரிவித்தார்.
நிறைவேற்றப் படவேண்டியவை....
இந்நிலையில், டெல்லியின் இளம் முதல்வர் என்ற பெருமையோடு பதவியேற்க உள்ள கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
லோக்பால் சட்டம்...
அதன்படி, அவர்களது தேர்தல் வாக்குறுதிகளானவற்றில் மூன்று முக்கியமானவற்றைக் கூறலாம். முதலாவதாக, ஊழலை கட்டுப்படுத்த, டெல்லியில் ஜன லோக்பால் சட்டத்தை ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் இயற்றுவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்துள்ளது.
மின் கட்டணம் குறைப்பு...
இரண்டாவதாக, அதிகரித்துள்ள மின் கட்டண அளவை 50 சதவீதம் அளவுக்கு குறைப்பது என்பது. எவ்வாறு மின்கட்டணத்தைப் பாதியாக கெஜ்ரிவால் குறைக்கப் போகிறார் என்பதை அறிய டெல்லி மின்சார வாரியம் உட்பட மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.
700 லி தண்ணீர்...
மூன்றாவதாக, டெல்லியில் வாழும் 50 லட்சம் மக்களுக்கு தினமும், 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என அளிக்கப் பட்ட வாக்குறுதி.
சவால்....
இது தவிர மேலும் பல வாக்குறுதிகள் ஆம் ஆத்மி தரப்பில் சொல்லப் பட்டிருந்தாலும் உடனடியாக நிறைவேற்றப் பட வேண்டிய வாக்குறுதிகள் என மேற்கூறியவற்றைக் கூறலாம். ஆட்சியில் தனது வாக்குறுதிகளின் படி மாறுதல்களைச் செய்ய ஆம் ஆத்மிக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற கட்சிகளுடன் தான் விடுத்த தனது சவாலை ஆம் ஆத்மி நிறை வேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.