மோடி பாதையில்... ‘டாக் டூ ஏகே’... டெல்லி மக்களுடன் லைவ்வாக பேசிய கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இணையதளம் வாயிலாக டாக் டூ ஏகே என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுடன் நேரடியாக இன்று உரையாடினார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் பேசி வருகிறார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், தற்போது இதே பாணியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் மக்களுடன் நேரடியாகப் பேசும் புதிய நிகழ்ச்சி ஒன்றை இன்று துவக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேசுங்கள் எனப் பொருள்படும் வகையில் "டாக் டு ஏகே" ( Talk to AK) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து தொலைப்பேசி, எஸ்எம்எஸ் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் கேட்டும் கேள்விகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்தார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லி தலைமை செயலகத்தில் செய்யப்பட்டது. இதற்கென பிரத்யேகமாக www.TalktoAK.com என்ற பெயரில் இணையதளம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.
இது தவிர போன் மூலம் பேச விரும்புவோர் 0112339299 என்ற எண்ணிலும், எஸ்எம்எஸ் மூலம் கேள்வி கேட்க விரும்புவோர் 91-8130344141 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, மாதந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்த கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
விரைவில் நடக்க இருக்கும் கோவா, பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநில சட்டசபை தேர்தல்களை குறிவைத்தே கெஜ்ரிவாலும், மோடியை போன்று நேரடியாக மக்களுடன் பேசும் முயற்சியில் இறங்கி உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.