கருப்புப் பணத்தை பதுக்குபவர்களுக்கு கெஜ்ரிவால் ஆதரவு.. பா.ஜ.க குற்றச்சாட்டு
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருப்புப்பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருப்புப்பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதராவாக செயல்படுவதாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் .நரசிம்ஹா ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதற்கு முன்பே பாஜக தனது நண்பர்களுக்கு ரகசியமாக தெரிவித்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஜிவிஎல்.நரசிம்ஹா ராவ் பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றார்.
மேலும் இதுவரை கறுப்புப்பணத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்த கெஜ்ரிவால் தற்போது கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் நரசிம்ஹா ராவ் குற்றம்சாட்டினார்.
கருப்புப் பணம் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி கட்சியினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதாகவும் நரசிம்ஹா ராவ் தெரிவித்துள்ளார்.