லஞ்சம் கேட்டா 011- 27357169 கால் பண்ணுங்க... டெல்லியில் கேஜ்ரிவாலின் மற்றொரு அதிரடி!
டெல்லி: டெல்லியில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை பற்றி தகவல் தர பொது மக்களுக்கான அவசர உதவி தொலைப்பேசி எண்களை அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, அதிகாரிகள் எவரேனும் லஞ்சம் கேட்டால், 011- 2735 7169 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லலாம். இது, ஹெல்ப்லைன் தானே தவிர, புகார் எண் கிடையாது என்றார்.
இந்த ஹெல்ப்லைனுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னால், பாதிக்கப்பட்ட நபரே புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை ஆதாரத்துடன் சிக்க வழிவகுக்கப்படும். அதற்கான வழிகாட்டுதல்களை டெல்லி ஊழல் தடுப்புப் படை வழங்கும். மக்கள் தங்கள் செல்போன் மூலமே லஞ்ச முறைகேடுகளைப் பதிவு செய்யலாம்.
லஞ்சத்தை ஒழிக்கும் இந்தத் திட்டத்தால், ஒவ்வொரு குடிமகனுமே ஊழலுக்கு எதிரான போராளி ஆவார் என்றார். டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஹெல்ப்லைன் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.