ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி- மீண்டும் ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர், கேஜ்ரிவால் என்ற தனிநபரை மையமாக வைத்தே கட்சியும் இயங்குவதாக குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷண் கடிதமும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தமது தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
ஆனால் இந்த ராஜினாமாவை கட்சி நிராகரித்துவிட்டதாக யோகேந்திர யாதவ் அறிவித்திருந்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் டெல்லியில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டம் மீண்டும் இன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் உடல்நலக் குறைவால் கேஜ்ரிவால் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தமது ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேசிய செயற்குழுவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், டெல்லி முதல்வராக இருப்பதால் மாநில நிர்வாகத்தைக் கவனிக்கவே தாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளதால் ராஜினாமா செய்வதாக கேஜ்ரிவால் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் கேஜ்ரிவாலின் இந்த 2வது ராஜினாமா கடிதம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுதான் இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.