வாஜ்பாய் சுகவீனம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த கெஜ்ரிவால்
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என கெஜ்ரிவால் கேட்டுகொண்டுள்ளார்.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று 50-வது பிறந்த நாள். ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருப்பதால் தனக்கு எந்தவித பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் என கூறி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு கூறிவிட்டார்.
கெஜ்ரிவாலின் 50-வது பிறந்த நாளுக்காக அவருக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதை தவிர இந்தியா முழுவதும் உள்ள ஆம்ஆத்மி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனாலும் தமது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகரான நாகேந்தர் சர்மா அறிவித்திருக்கிறார்.
Delhi CM @ArvindKejriwal requests party volunteers & well wishers not to celebrate his birthday in view of deteriorating health condition of former Prime Minister Sh Atal Behari Vajpayee ji. Volunteers are requested to refrain from visiting CM residence.
— Nagendar Sharma (@sharmanagendar) August 16, 2018
"முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் யாரும் பிறந்த நாளை கொண்டாடவோ, வாழ்த்துகளை தெரிவிக்க அவரது இல்லத்திற்கு வரவோ வேண்டாம் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sad to hear about Atalji’s health. I pray to God for his fast recovery.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 16, 2018
இது தவிர, அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாஜ்பாயின் உடல்நிலை குறித்து அறிந்த நான் சோகமாக உள்ளேன். அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்" என குறிப்பிட்டு உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை கெஜ்ரிவால் ஏற்கனவே சென்று சந்தித்து விசாரித்துவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.