மாட்டிறைச்சி வதந்தி.. கொல்லப்பட்ட உ.பி. முதியவர் குடும்பத்தை 'போராடி' சந்தித்தார் கேஜ்ரிவால்!!
லக்னோ: மாட்டிறைச்சியை வீட்டில் சமைத்து சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் அடித்துக் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச முதியவர் குடும்பத்தைச் சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் போலீசார் அனுமதி அளித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியை வீட்டில் சமைத்து சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் இக்லாக் என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் பெரும் வன்முறை வெடித்தது.
அவரது குடும்பத்தினரை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது ட்விட்டரில், தாத்ரி கிராமத்துக்குள் செல்லவிடாமல் எங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா சென்று சந்தித்திருக்கிறார். முஸ்லிம் தலைவர் ஒவாய்ஸி சென்று சந்திக்கிறார். அவர்களுக்கு அனுமதி அளித்த போலீஸ் என்னை மட்டும் தடுப்பதன் காரணம் என்ன? நான் எப்போதும் அமைதியை விரும்புபவன் என்று குறிப்பிட்டிருந்தார்.
We r stopped by police n admn. Mahesh Sharma n Owaisi not stopped yest. Then y me? I am most peace loving. Want 2 jst meet Ikhlak's family
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 3, 2015
பின்னர் சுமார் 2 மணிநேர காத்திருப்புக்கு பிறகு உள்ளூர் மக்களின் பாதுகாப்புடன் இக்லாக் குடும்பத்தாரை அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.