தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரணியத்திற்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பொருளாதார நிலை குறித்த விமர்சனங்களுக்கு மத்தியிலும், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியத்திற்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி இப்பொறுப்புக்கு வந்த அரவிந்த் சுப்பிரமணியத்தின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அவரை மேலும் ஓராண்டுக்கு அப்பதவியில் நீடித்துள்ளது மத்திய நிதித்துறை அமைச்சகம். அறிக்கையொன்றில் இதை உறுதி செய்துள்ளது அமைச்சகம்.
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 2013 செப்டம்பரில் பதவியேற்றதும் காலியான, பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்வர்தான், அரவிந்த் சுப்பிரமணியம்.
உலகளாவிய அறிவுஜீவிகள் பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் ஒருவராக உள்ள அரவிந்த் சுப்பிரமணியம், ஜன்தன் திட்டத்திற்கு முன்னோடி. பொருளாதார ஆய்வு அடிப்படையில் உலகின் டாப் 1 சதவீத பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் அரவிந்த் சுப்பிரமணியம் என்று கூறுகிறது ரெபெக் ரேட்டிங்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற அரவிந்த் சுப்பிரமணியம், அகமதாபாத்திலுள்ள ஐஐஎம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.