கோசி நதியில் வெள்ளப்பெருக்கு: பீகாரில் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றம்
பாட்னா: கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்து பீகாரில் நதியோரங்களில் வசித்த மக்கள் 20 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலைக்குள் 1 லட்சம்பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாருக்குள் பாயும் கோசி நதியில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகாரின் வடக்கு மாவட்டங்களில் நதியோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். நதியோரம் கட்டப்பட்டுள்ள 10 மீட்டர் உயரமுள்ள சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இதுவரை சுமார் இருபதாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் ஒரு லட்சம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் நதியில் பாறைகள் விழுந்து நதியின் ஆக்ரோஷத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் வியாஜி தெரிவித்தார்.
பீகார் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அந்த மாநில முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார்.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 8 பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம், விமானப்படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தம் ஒன்றரை லட்சம் மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ள பீகார் மாநில அரசு, அவர்கள் தங்குவதற்காக 84 நிவாரண மையங்களை அமைத்துள்ளது.